அன்னையை அறிவோம் – 1

தூய பாத்திமா அன்னை (மே 13)
திருத்தொண்டர் வில்சன், சென்னை 

1917 மே 13 முதல் அக்டோபர் 13 வரை, போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் லூசியா சான்டோஸ், ஜெசிந்தா மார்த்தோ, பிரான்சிஸ்கோ மார்த்தோ என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு தூய பாத்திமா அன்னை என்ற பெயர் வழங்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போர் பற்றியும் ரஷ்ய நாட்டின் மனமாற்றம் பற்றியும் பாத்திமா அன்னை வழங்கிய முன்னறிவிப்புகள் அப்படியே நிகழ்ந்ததால், பாத்திமா காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது. பாத்திமா அன்னையின் திருவிழா மே 13ம் தேதி கொண்டாடப்படுகிறது,
வானதூதரின் காட்சி
அன்னையின் காட்சிக்காக சிறார்களை தயாரிக்கும் விதமாக 1916ஆம் ஆண்டு சிறார்களான லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ ஆகியோருக்கு முன்பாக ஒரு வானதூதர் தோன்றி, தன்னை சமாதானத்தின் தூதர் என்று சொல்லி, அவர்கள் "பாவிகளுக்காக செபிக்க வேண்டும்" என்று கூறினார்.
1917 மே 13ந்தேதி, மீண்டும் சிறார் மூவர் முன்னும் தோன்றிய வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி இருந்தார். அவரது கையில் இரசக் கிண்ணமும், அதன் மேலே மிதந்தவாறு நற்கருணை அப்பமும் காட்சியளித்தது.
அன்னை மரியாவின் காட்சிகள்
வானதூதர் மறைந்தவுடன் சிறிது நேரத்தில், சிறார்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்த புதர் செடியின் மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியது. அந்த மேகத்தின் மேல் அன்னை மரியா வென்னிற ஆடையில் சூரியனை விட பிரகாசமாக லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ ஆகிய மூன்று பேருக்கும் காட்சி அளித்தார். மரியன்னை அவர்களிடம், ‘நான் செபமாலை அன்னைஎன்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும், அந்த மூன்று சிறாரும், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 13ம் தேதி அதே இடத்திற்கு வர வேண்டும் என்று மரியா கட்டளையிட்டார். ஜூலை 13ம் தேதி, அன்னை மரியா காட்சி அளித்தபோது சிறுவர்களுக்கு நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார். மக்கள் நரகத்தில் விழாமல் இருக்க, இன்று நாம் ஜெபமாலையின் ஒவ்வொர பத்து மணியின் முடிவில் சொல்லும் என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும்...’ என்ற செபத்தை செபிக்குமாறு அன்னை கற்றுக்கொடுத்தார். காட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அக்டோபர் 13ந்தேதி சூரியனில் ஓர் அதிசயம் நிகழும் என்றும் அவர் முன்னறிவித்தார்.
சூரியனின் அற்புதம்
1917 அக்டோபர் 13ந்தேதி, அன்னையின் காட்சியைக் காண சுமார் 70 ஆயிரம் பேர் கூடி இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போது வானில் வியத்தகு அதிசயங்கள் தோன்றியது. வானில் இருந்து பல வண்ணங்கள் தோன்றி மக்கள் மேல் ஒளிர்ந்தது. பெரிய மழைப் பெய்த வேளையிலும் அன்னை மரியா காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டது. மக்கள் பலரும் அன்னை தோன்றிய ஒளிரும் மேகத்தைக் கண்டனர்
சூரியனின் அற்புதம் நிகழ்ந்தபோது, சூரியன் மக்களின் கண்களுக்கு குளிர்ந்த நிலவு போன்று தோன்றியது. அது பம்பரம் போல சுழன்றவாறு, சிறிது நேரம் குடிகாரனை போல அங்கும் இங்கும் தள்ளாடியது. இவற்றை அங்கிருந்த அனைவரும் பார்த்தனர். இந்த செய்தி போர்ச்சுக்கல் நாட்டு பத்திரிகைகள் அனைத்திலும் நிழற் படங்களுடன் வெளிவந்தது.
மூன்று இரகசியங்கள்
1. மக்கள் பாவத்தில் இருந்து மனந்திரும்பவில்லை என்றால் மீண்டும் ஓர் உலகப் போர் தோன்றும் என்றும், காரணமின்றி இரவில் வானில் தோன்றும் ஓர் ஒளியே அதற்கு அடையாளமாக இருக்கும் என்றும் கூறினார். அன்னை முன்னறிவித்த அந்த ஒளி, 1938 ஜனவரி 25ந்தேதி வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம் முழுவதும் ஒளிர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் துவங்கியது.
2. அன்னை மரியா பாத்திமாவில் காட்சி அளித்தபோது ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்ப கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 1990களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்பியது.
3. இறுதி காலத்தில் மக்கள் கடவுளை மறந்து தீய வழிகளில் ஆர்வமாக இருப்பார்கள் என்றும், தீவிரவாதமும், வன்முறைகளும், பயமும் அதிகரிக்கும் என்றும், கத்தோலிக்க திருஅவையும் திருத்தந்தையும் அதிகம் துன்புற வேண்டியிருக்கும் என்றும், கடவுள் பல்வேறு துன்பங்களை உலகில் அனுமதிப்பார் என்றும், உண்மை கடவுள் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோர் அழிவில் இருந்து தங்களை காத்துக்கொள்வர்
இந்த மூன்று இரகசியங்களைத் தவிர மற்றும் சில செய்திகளையும் அன்னை வழங்கினார். ஜெசிந்தாவும், பிரான்சிஸ்கோவும் சிறு வயதிலேயே இறந்துவிடுவர் என்றும், தனது செய்தியைப் பரப்ப லூசியா பல ஆண்டுகள் உயிரோடு இருப்பார் என்றும் மரியன்னை முன்னறிவித்திருந்தார். அதுவும் அவ்வாறே நிகழ்ந்தது. பல்வேறு விசாரணைகளுக்கு பின்பு, 1930 அக்டோபர் மாதத்தில் பாத்திமா காட்சிகளின் உண்மைத்தன்மை திருச்சபையால் உறுதி செய்யப்பட்டது
காட்சிகள் சொல்லும் செய்தி 
பாத்திமா நகரில் அன்னை அளித்த காட்சிகள் உலகில் யாரும் அழிந்து போகதபடி அனைவரும் மீட்கப்பட வேண்டும் என்ற கிறிஸ்துவின் மீட்புத்திட்டத்தில் அன்னை ஆற்றும் அளப்பரிய பங்கினை எடுத்தியம்புகிறது. அன்னை மரியா நம்மிடம் கேட்பதெல்லாம் மூன்றுதான்
பாவிகள் மனம் திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தை புண்படுத்தக்கூடாது
மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கப்பட வேண்டும்
இயேசு மற்றும் அன்னை மரியாவின் இதயங்கள் நம் மன்றாட்டுகளுக்கு செவி கொடுக்கக் காத்திருக்கின்றன. நாம் மனம் திரும்புவோம் பிறரும் மனம் திரும்ப ஜெபிப்போம். இறுதியில் நிச்சயம் அன்னையின் மாசற்ற இதயம் வெற்றி பெறும்

ஜெபம் (வானதூதர் கற்றுக்கொடுத்தது)

என் கடவுளே, நான் உம்மை விசுவசிக்கிறேன், நான் உம்மை ஆராதிக்கிறேன், நான் உம்மை நம்புகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும், உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும்உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசிக்காதவர்களுக்காகவும் உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றேன். ஆமென்.
---

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD