Showing posts with label மெரா. Show all posts
Showing posts with label மெரா. Show all posts

சனிக்கிழமை சங்கதி - "வாங்க செத்து செத்து விளையாடலாம்"

வாங்க செத்து செத்து விளையாடலாம் – 1 

சகோ. மெரா

-----------------------------------------------------------------


வணக்கம் வாசகர்களே!

ஒருநாள் புத்தர் ஒரு கிராமத்தில் தன் பயணத்தின் போது வந்து தங்கி இருந்தார்அங்கு ஒரு பெண்ணின் சிறிய வயது பிள்ளை திடீரென மரணித்தது. அங்கிருந்த கிராமவாசிகள்புத்தர் இந்த கிராமத்தில்தான் இருக்கிறார் அவரிடம் செல் அவர் உன் பிள்ளையை காப்பாற்றுவார், மீண்டும் உயிர் கொடுப்பார்,” என்று கூறினார்கள்அந்தப் பெண்ணும் மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு புத்தரிடம் ஓடிச்சென்று அவரது காலடிகளில் இறந்த பிள்ளையை போட்டாள்

அழுது  கொண்டும் மாரடித்துப் புலம்பிக் கொண்டும் இருக்கின்ற அந்த பெண்மணியை பார்த்துஏன் அம்மா அழுகிறீர்?” என்று கேட்க அந்த பெண் அவரிடம்அய்யா எனது பிள்ளை சிறிய வயதிலேயே இறந்து விட்டாள். உம்மிடம் சென்றால் நீர் எனது பிள்ளையை காப்பாற்றுவீர் என்று இந்த கிராமவாசிகள் கூறியதால் நான் இங்கே வந்திருக்கிறேன். தயவுகூர்ந்து எனது பிள்ளையை உயிர் பிழைக்க செய்யுங்கள்," என்றார். அந்தப் பெண்மணியை பின்தொடர்ந்து அனைத்து கிராம வாசிகளும் அவருடைய சீடர்களும் மனதில் எதிர்பார்ப்புடன் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க காத்திருந்தனர்

உடனே புத்தர் அப்பெண்ணிடம் நிச்சயம் உனது பிள்ளையை உயிர் பிழைக்கச் செய்கிறேன். அதற்கான வழி இதுதான் "இந்த கிராமத்தில் உள்ள யாராவது ஒருவர் வீட்டிலாவது யாரேனும் இறக்காமல் இருந்தால் அவர்களிடம் ஏதேனும் உணவு பொருளை பெற்றுக்கொண்டு உன் பிள்ளைக்கு உண்ணக் கொடு அப்போது உனது பிள்ளை உயிர் பெறும்" என்றார். அந்தப் பெண்ணும் மனதில் நம்பிக்கையோடு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்கள் வீட்டில் யாரேனும் இறக்காமல் இருக்கிறார்களா என்று கேட்டுக் கொண்டே சென்றாள். எந்த ஒரு வீட்டிலும் இறப்பு என்ற ஒரு நிகழ்வு நடந்திராமல் இல்லை. அந்த பெண்ணும் நம்பிக்கையை விடாமல் கிராமத்தின் கடைசி வீடு வரை சென்று தனது பிள்ளைக்காக போராடிக் கொண்டிருந்தாள். ஆனால் அப்பெண்ணால் மரணம் நிகழாத ஒரு வீட்டினை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் எல்லார் வீட்டிலும் யாரோ ஒருவர் மரணித்திருந்ததால் அப்பெண்ணால் தன் பிள்ளைக்கான மருந்தினை கண்டுபிடிக்க முடியவில்லை. தனக்கிருந்த அனைத்து நம்பிக்கையையும் இழந்த நிலையில் அப்பெண்ணுக்கு  ஞானம் பிறந்தது. அப்பொழுதுதான் அப்பெண் உணர்ந்தா இறப்பு, மரணம் என்ற ஒன்று மனித பிறவிகளுக்கு மட்டுமல்லாது உலகில் உயிர்வாழும் அனைவருக்குமே நிச்சயமான ஒன்றாகும். இதை அறிந்த அப்பெண் மீண்டும் புத்தரின் காலடிகளை தழுவி வீடு திரும்பினாள்.

என்னடா எடுத்தவுடன் சங்கதியை பேசத் தொடங்கி விட்டானே என வியப்பாகப் பார்க்காதீர்கள். கருத்து பேசுவதற்கு முன்னால் இன்று கதை சொல்வது முக்கியமாக தோன்றியது அது தான் சங்கதி.

தொடர்ந்து இறப்பு செய்திகள் நமது இதயங்களை துளைக்கின்றன. அய்யய்யோ இவரா? போன வாரந்தானே பார்த்தேன். அதுக்குள்ள போய் சேந்துட்டாரே! என்று சோகத்திற்குள் நம்மை ஆழ்த்துகிறது இன்றைய மரணங்கள். இது போதாக்குறைக்கு இந்த கொரோனாவால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சில நபர்களுக்கு, "ஒரு வேளை அவருக்கு கொரோனா இருந்திருக்குமோ?" என்ற கேள்விதான் முதலில் எழுகிறது. எப்படி இறந்தால் என்ன? 

இன்னும் சிலரது வாழ்கை பயத்தால் பாடைக்கு பாஸ் போர்ட் எடுக்க காத்திருக்கிறது. மரண பீதி நாளுக்கு நாள் சோற்றுக்கு பொறியல் போலாகிறது. தொடர் ஆன்மிகவாதிகளின் இறப்பும் நம்மில் பலரை கடவுளை காட்டுமிராண்டியாக பார்க்க வைக்கிறது

(இறப்பு என்ற சொல் சிறிது வலுவின்மையை வெளிப்படுத்துவதால் மரணம் என்ற சொல்லாடலை இங்கு பயன்படுத்த விழைகிறேன்.)


மரணம் என்ற வார்த்தை வாழ்கையின் எதார்த்தம். மரணம் இல்லாத மனித வாழ்கையே இல்லை எனலாம்

#அப்படியென்றால் பல யோகிகள் ஞானிகள் பல நூறு ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறதாக சொல்கிறார்களே அது என்ன? என்ற கேள்விக்கு பதில் அந்த ஞானிகளிடம் Interview எடுத்த யாராவது பதில் சொன்னால் பொருத்தமானதாக இருக்கும். உங்கள் துரதிஷ்டம் நான் யாரையும் கண்டது கூட இல்லை

#அப்போது இயேசு உயிர்த்தெழவில்லையா? என்றால்... ...  இயேசு மனிதத்தின் முழுமையை தனது சிலுவையில் அல்லவா காட்டினார். முழு இறைவனாய் அவர் உயிர்த்தெழுந்த்ததார்தானே.


#அப்போ மரணத்தைக் கடக்க வேறு வழி இருக்கிறதா ? என்றால்... இருக்கிறது ஆனாலும் மரணம் மனிதனை விடாது. ஏனென்றால் மரணம் ஜனனத்தின் எதிர்வினை


பிறப்பின் போது உடலும் உயிரும் ஒன்றிணையும் இறப்பின் போது இரண்டும் பிரியும் இது உலக நியதி. இதை மாற்றுவது இயலாத காரியம்


# ஆனால் மரணத்திற்கு பிறகு வாழ்வுண்டா? என்றால்... ஆம் இருக்கிறது. இதற்கு பதிலை ஆவி, ஆன்மா என்று எடுத்துச் செல்லாமல் எதார்த்தமாக பதிலளிக்க விரும்புகிறேன்.

மரணம் நமது உடலின் இருப்பை மட்டுமே அழிக்க இயலும் ஆனால் மனித மனங்களின் இருப்பு நிலையையும் கடத்தல் நிலையையும் மாற்ற இயலாது. ஒரு வேளை இயேசு உடல் ரீதையாக உயிர்த்தெழாமல் இருந்திருக்கலாம் என்று நீங்கள் சொல்பவர்களாக இருந்தால், இப்படி யோசித்துப் பாருங்கள்.

இன்றளவும் இயேசுவை உலகமே நினைவு வைத்திருக்கிறது. இதுவும் ஒரு வகையில் இறவாமை தானே. சொல்லப் போனால் எதார்த்த மனிதர்களுக்கு இதுதான் உண்மையான இறவாமை.


அந்தப் பட்டியலில் பலர் இடம் பெற்றுள்ளனர். இன்றும் நமது மனங்களில் வாழ்கின்றனர். உதாரணமாக காமராஜர், அம்பேத்கர், அப்துல் கலாம், மகாத்மா காந்தி, அவ்வளவு ஏன் ஹிட்லர், முசோலினி, கூட இன்னும் இறவாதவர்கள்தான்


அதிர்ச்சியடைய வேண்டாம்... என்னடா ஹிட்லர் இன்னும் வாழ்கிறாரா? என்ன பைத்தியக்காரத்தனம் என்று எண்ணியிருப்பீர்கள். கவலை வேண்டாம். மரணத்தைப் பற்றி மூன்று கால பரிணாமங்களில் பயில வேண்டும். இதுவரை சிறிது நிகழ்கால  விளிம்பில் சங்கதி பேசினோம் அடுத்த வாரம் இதன் தொடச்சியை இறந்த கால விளிம்பில் நின்று பேசுவோம்... 


வாங்க செத்து செத்து விளையாடலாம்...


தொடரும் ....


விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD