கொரோனாவே கொஞ்சம் கேட்டு கண் மூடு!
சனிக்கிழமை சங்கதி - 5
சனிக்கிழமை சங்கதி 5
நம்பிக்கை: விளைவுகளின் விவகாரம்
மெரா
---------------------------------------------------------------------
லாக் டவுன் இன்றைக்கு முடியுமோ? நாளைக்கு முடியுமோ? என்று விழிகளில் விளக்கெண்ணை ஊற்றி காத்துக்கொண்டிருக்கும் வெறுப்படைந்த மக்களுக்கு என் வணக்கங்கள்.
இன்றைக்கு சங்கதிக்கு போறதுக்கு முன்னாடி இந்த வாரத்தோடு சிறப்பு அம்சம் நம்மை இன்றைய தலைப்புக்கு இட்டுச் செல்லும் என்று நம்புகிறேன். புரியவில்லையா?
சென்ற வாரத்தை ‘இழப்பு’ வாரம் என்று கூறி இருந்தேன். ஆனால் இந்த வாரம் ‘பிறப்பு’ வாரமாகவே இருக்கிறது. ஆமாங்க! கொரோனா தொற்றினால் 5% பேர் உலகளவில் உயிரிழக்க, 5% பேர் கொரோனா நமக்கும் வந்துவிடுமோ? என்ற பயத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் இந்த வார கணக்கெடுப்பின்படி 30% பெண்கள் கருத்தரிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.
அது ஒரு புறமிருக்க பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததால் பல மாணவர்களின் வாழ்க்கை மறுபிறப்பு அடைந்துள்ளது.
சரி வாங்க சங்கதியை கேட்கலாம்
ஒரு நாள் மாலை வேளையில் எனது மாலை ஜெபத்தை முடித்துவிட்டு வழக்கம் போல் புத்தகங்கள் படிக்க தொடங்கினேன். என் மனதிற்குள் வெகுநாட்களாக ஒரு கேள்வி, பயம், குழப்பம் என் மனதை உறுத்திக் கொண்டிருந்தது ஒரு விடயம். பல புத்தகங்களும் நபர்களும் பல வேளைகளில் எனது கேள்விகளுக்கு விடை தந்திருக்கிறார்கள். இன்னும் பல நபர்கள் நம்பிக்கைக்கு துரோகம் விளைவித்தவர்களும் உண்டு. அவர்களால் ஏற்பட்ட தீரா காயங்கள் மனதில் பள்ளத்தாக்குகளை ஏற்படுத்தினாலும் நாம் நம்பிக்கை கொண்டோரின் உந்துதல் பள்ளத்தாக்குகளையும் நிரப்பிவிடுகின்றன. இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் சிறுகதை ஒன்று கண்ணில் தென்பட்டது அதை ஆர்வமுடன் வாசிக்கலானேன்.
ஹட்ஸன் டெய்லர் என்ற புகழ்பெற்ற மதபோதகர் கேனிபல் தீவுகளுக்கு மாலுமிகளுடன் பாய்மரக் கப்பலில் பயணித்தார். அப்போது கரையை அடைய சில மணி நேரங்களே இருந்த நிலையில் திடீரென்று கடல் நிசப்தமானது. காற்று வீசுவது நின்று போக பாய்மரக்கப்பல் நகராமல் நின்றது. உடனே அந்த கப்பலின் கேப்டன் அங்கிருந்த ஹட்ஸனிடம் சென்று ‘காற்று வீசும் படி இறைவனிடம் வேண்டுங்கள்' என்று கேட்டார். உடனே அந்த ஹட்ஸனும் ‘நான் நிச்சயம் வேண்டுகிறேன் ஆனால் நீங்கள் முதலில் பாய்களை காற்றை பற்றும் படி நிறுத்தி வையுங்கள்' என்றார். ஆனால் கேப்டன் ‘அவ்வாறு செய்வதன் மூலம் பிற மாலுமிகள் முன் நமது மானம் கப்பலேறி விடுமோ?’ என்று பயந்து ‘அவ்வாறு செய்யமாட்டேன்' என்றார். அப்போது ஹட்ஸன் ‘நானும் இறைவனிடம் உதவி கேட்டு வேண்ட மாட்டேன்' என்று சொல்லிவிட்டார். சிறிது நேரம் கழித்து 'என்னடா இது நமக்கு வந்த சத்திய சோதனை' என்று எண்ணி கப்பலின் கேப்டன் ‘சரி நான் பாய்களை விரித்து தயார்நிலையில் வைக்கிறேன் நீங்கள் எங்களுக்காக ஜெபியுங்கள்' என்றார். ஹட்ஸன் கதவை தாளிட்டுக் கொண்டு செபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்க செபத்திலிருந்து எழுந்து கதவை திறந்த போது கப்பலின் கேப்டன் ஹட்ஸனிடம் நீங்கள் ‘இன்னும் ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டார். உடனே அவரும் ‘ஆம்’ என்று பதிலளித்தார். உடனே கேப்டன் ஹட்ஸனிடம் ‘நீங்கள் ஜெபம் செய்தது போதும் என்று நினைக்கிறேன்' என்று கூற ‘ஏன்’ என்று அவர் கேட்க அதற்கு கேப்டன் இவ்வாறு கூறினார் ‘நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக காற்று வீசுகிறது எனவே காற்று வீசும் படி இறைவனிடம் வேண்டுடியது போதும்’ என்றார்.”
இப்பொழுது வாங்க சங்கதி என்னவென்று பார்ப்போம்.
இப்போது மேலே கூறப்பட்ட கதையில் மதபோதகர் மாலுமிகளின் கேப்டனிடம் தங்களால் முடிந்த காரியத்தை செய்யச் சொல்கிறார். அதன்பிறகு தான் இறைவனிடம் ஜெபிப்பதாகவும் கூறுகிறார். இதில் இரண்டு விடயங்கள் புலப்படுகிறது ஒன்று மத போதகரின் நம்பிக்கை மற்றொன்று கேப்டனின் நம்பிக்கையின்மை. ஆனால் உதவிகேட்டு வந்தவரோ கேப்டன் தான் மதபோதகர் அந்த உதவியை செய்து தருவதாக கூறுகிறார். இதில் கேப்டனிடம் தெளிவான நம்பிக்கையின்மையை நம்மால் காண முடிகிறது. அதனால்தான் போதகர் முதலில் கேப்டனை அந்த பாய்மரக் கப்பலின் பாய்களை விரித்து தயார்நிலையில் வைக்கும்படி கூறினார். இதையேதான் புனித தொன் போஸ்கோ 'Do the best you can. God and Mary will do the rest.’ என்று கூறுவார். இறைவன் மீது ஹட்ஸன் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் ஆழமானதாக இருந்திருக்கிறதை நம்மால் உணர முடியும்.
எங்கேயோ படித்த ஞாபகம் “நம்பிக்கை என்பது காண முடியாத காரியங்களை காணும், வியக்கத்தக்கதை நம்பும், இறுதியில் இயலாத காரியங்களையும் பெற்றுக் கொள்ளும்.”
ஆம் உண்மையில் அதுதான் நம்பிக்கையின் சரியான வரையறையாகும். பல நேரங்களில் நாமும் பல காரியங்களை செய்கிறோம் ஆனால் எல்லா காரியங்களையும் நம்பிக்கையுடன் தான் செய்கிறோம். எவ்வாறெனில் ஏதோ ஒருவிதமான எதிர்நோக்கு நம்பிக்கை நம்மில் அந்த காரியத்தை செய்யத் தொடங்கும்போது பிறக்கிறது. அதனால்தான் போதகரும் கேப்டனை சென்று ‘முதலில் உன்னால் முடிந்த காரியத்தை செய் பிறகு அந்த ஜெபத்தின் வல்லமை அதில் புலப்படும்’ என்று கூறுகிறார்.
நம்பிக்கை இங்கு நால்வகை நிலைகளில் பரிணமிக்கிறது.
- நடக்கின்ற நிகழ்வின்மீது நம்பிக்கை (Hope in the event – Phenomeno Centric Hope)
- செய்யப்படுகின்ற நபர்கள் மீது (Hope in Other – Altruistic Hope)
- செய்கிறவர் மீது (Hope in Oneself – Egocentric Hope)
- கடவுள் மீது (Hope in God – Theocentric Hope)
நாம் பல நேரங்களில் முதல் இரண்டு காரியங்களில் கருத்தாய் இருந்து தோற்கிறோம். அதனால் தான் நம்மீது நமக்கு சந்தேகம் ஏற்பட்டு நம்பிக்கை இழந்தோர் ஆகிறோம். கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருமே எந்த காரியங்களை செய்ய துணிந்த பின்பும் அதில் நம்பிக்கை இல்லாமல் செய்வதில்லை. நம்பிக்கை இல்லாமல் செய்யும் பொழுது அங்கு அந்தக் காரியங்கள் நடைபெறாமல் இருப்பதை பல நேரங்களில் நாம் கண்கூடாக பார்த்ததுண்டு. உதாரணமாக மத்தேயு 13: 58 ல் இயேசு அங்கிருந்த மக்களின் நம்பிக்கையின்மையால் வல்ல செயல்கள் பல அவரால் செய்ய முடியவில்லை என்று நாம் விவிலியத்தில் படித்திருக்கிறோம்.
“சிறிதளவு நம்பிக்கை நமது ஆன்மாவை விண்ணகத்திற்கு எடுத்துச்செல்லும் ஆனால் பெரிதளவு நம்பிக்கையோ விண்ணகத்தையே நம் ஆன்மாவிடம்” என்று ஒரு புகழ்பெற்ற சொல்லாடல் இருந்து வருகிறது.
பல நேரங்களில் நாம் இழப்பினை சந்திக்கும் பொழுது, குறிப்பாக நம்மை சார்ந்த, நமக்கு மிகவும் நெருக்கமான சிலரை நாம் இழக்கும் தருவாயில் அவர் அருகே சென்று நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள் என்று சொல்லும்பொழுது மிகவும் அபத்தமாக தோன்றும். ஆம் அந்த நேரங்களில் நிச்சயமாக நமக்கு நெருக்கமான யாரோ ஒருவர் நம்மை விட்டு பிரிந்து விடுவார் என்று நன்கு உணர்ந்த பொழுதும் நமக்கு சொல்லப்படும் அந்த வார்த்தைகள் உண்மையில் நமக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தாது, அது வெறும் ஆறுதலாக வேண்டுமானால் அமையலாம்.
அதுமட்டுமன்றி பல நேரங்களில் வாழ்க்கையே வெறுத்துப் போய் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் நம்மில் பலரிடத்திலும் நம்பிக்கை என்பது சிறிது குறைந்தே காணப்படும். ஏன் பல நேரங்களில் வாழ்க்கை வழுக்கி விழுந்தார் போல் தோன்றக்கூடும். பல இளைஞர்கள் இந்த நம்பிக்கை என்ற விடயத்தை தவறாக புரிந்து கொள்வதால் தான்தவறான பாதையில் தங்களது வாழ்வை செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஆனால் இன்று இறைவன் நம் அனைவருக்கும் ஒரு சிறிய இறைவார்த்தையினால் நம்பிக்கை என்கிற இறைப் பரிசை விளக்குகிறார். லூக்கா 17:6ல் கடுகளவு நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் மலையை பார்த்துப் பெயர்ந்து கடலில் ஊன்றி நில் என்று சொன்னால் அது உண்மையில் நடக்கும் என்று இயேசு கூறுகிறார். ஏனெனில் விவிலியம் கூறுகிறது. மாற்கு 10: 27 கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ஆகையால் நாம் கடவுள் மீது கொண்டுள்ள சிறிதளவு நம்பிக்கை இயலாத காரியங்கள் பலவற்றை செய்ய வல்லது.
இதை இன்னும் ஆழமாக இன்னும் எதார்த்தமாக கூற வேண்டுமானால், குறிப்பாக கடவுளை நம்பாத அவர்களுக்கு இயேசுவின் இந்த செய்தி பொதுவான செய்தியாக அமையலாம். உலகில் உள்ள அனைவருக்கும், ஆத்திகர் நாத்திகர் என்று இல்லாமல் பொதுவான விடயத்தை இயேசு கூறுகிறார். உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று.
இந்கு கூறப்படும் இந்த விடயம் அபத்தமாக இருப்பினும் குறிப்பாக பலர் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் நம்மை பயன்படுத்தி அல்லது நம்மை உதாசீனப்படுத்தி, அந்த நம்பிக்கையை குலைத்து நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பார்கள் என்று நம்புகிற நேரத்தில் அதை முழுவதுமாக உடைத்த நேரங்களை நாம் எண்ணிப் பார்க்கையில் பிறர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்ற எண்ணமே நமக்கு அமானுஷ்ய கனவாக அமைந்து விடுகிறது.
இருப்பினும் உண்மையாக மன அமைதி பெற வேண்டுமென்றால் நாம் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாத தன்மை நமது வாழ்க்கையை இருளில் ஆழ்த்திவிடும். அதற்கு விவிலியமே சான்று இயேசு மக்களின் நம்பிக்கையின்மையை கண்டு அவரால் அற்புதங்கள் எதுவும் செய்ய முடியவில்லை (மத்தேயு 13 58) என்று நாம் வாசிக்கிறோம். கடவுளை இயக்கும் சக்தியாக இந்த நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும் நம்பிக்கை என்ற விடயத்தை நாம் சௌகரியமான சூழ்நிலையில் பயில முடியாது. உண்மையான மனிதனின் நம்பிக்கை ஒரு விடயத்தை இழப்பதன் மூலமும் அதை அவனிடமிருந்து படிப்பதன் மூலமும் அதிகரிக்கும்.
“இழப்பே நம்பிக்கையின் பிறப்பிடம்”
எனவே நம்பிக்கையை இழந்து விடாமல் வருகின்ற நாட்களிலும் நமது வாழ்வை வளமாக்க நம்பிக்கையை கையில் எடுப்போம்.
நம்பிக்கை: நம் வாழ்க்கையின் விளைவுகளுக்கான விவகாரம்.