சனிக்கிழமை சங்கதி - 2 - அன்பு


சனிக்கிழமை சங்கதி - 2 

அன்பு - இது உங்கள் சொத்து 


சகோ. மெரா  

--------------------------------------------------------------
மே மாத அனலில் அவிஞ்சி போய் வெளியேயும் போகமுடியாமல் உள்ளேயும் இருக்க முடியாமல் இருக்கிற மக்களே! இன்றைய சனிக்கிழமை சங்கதி பேசலாம் வாங்க...
இப்போது இருக்கிற தலைமுறைக்கு அன்பு என்பதற்கான அர்த்தமே புரியாமல் போகிறது. பெஸ்ட் பிரண்ட் என்கிற காலம் போய் இப்போது பெஸ்டி என்று சொல்லிக்கொண்டு சுற்றுகிற காலம் ஆகிடுச்சு. இதைப்பற்றி பேசும்போது ஜெர்மனி நாட்டில் சின்ன பிள்ளைங்க எல்லாரும் தங்கள் பெற்றோர்கள் கைபேசியிலேயே காலத்தை கழிக்கிறார்கள் என்று கண்டனப் போராட்டம் செய்தது நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் கூட டிக் டாக்கில் ஆண்-பெண் இருவர் நண்பர்கள் என்ற பெயரிலே காதலர்களுக்கும் மேலாக தங்கள் நெருக்கத்தை காணொளியாக பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள்

சரி வாங்க இன்றைக்கு சங்கதி என்ன என்று தெரிஞ்சுப்போமே
கொரோனா ஊரடங்கினால் தன் காதலியை பார்க்க முடியாமல் தவித்த பையனுக்கு கள்ளக் கதவு திறந்தது போல நம்ம தமிழ்நாடு அரசால் திறக்கப்பட்டது டாஸ்மாக் கடைகள். அந்தப் பையனும் டாஸ்மாக் கடை திறந்த நாளிலிருந்து குடித்துக்கொண்டே இருந்தானாம். அப்போது அந்த வழியாக சென்ற பெரியவர்ஏன்டா தம்பி ஏன் இப்படி குடிக்கிற ?” என்று எப்பவும் உரிய பெரியவங்க தொனியில் கேட்டதுக்கு...  “நான் உனக்கு தம்பியா ? நீங்க என் கூட வா பிறந்தீங்க?” என்று வழக்கம்போல எகத்தாளமாக பேசிவிட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்தான்அப்போது அந்த பெரிய மனுஷன் அந்த சின்னப்பையனோட பக்கத்தில் உட்கார்ந்து ஒரு கதை சொன்னார்.
நெதர்லாந்தில் 50 வருடமாக அலிடா என்ற ஒரு பெண்மணி புகைப் பழக்கத்துக்கு ஆளாகி நுரையீரல் வீணாய்ப் போன நிலையில் தன்னை விட்டு எல்லோரும் விலகிப்போய் தனியாய் வாழ்ந்தாராம். எவ்வளவு முயன்றும் அப்பழக்கத்தை விட முடியவில்லையாம். “
உடனே அந்த பையனுக்கு மனதுக்குள் ஒரு பீதி , “இந்தப் பெருசு நாம கலாய்த்ததுல சாபம் விடுகிறாரோ?” என்று எண்ணிக்கொண்டு "எதற்கும் கொஞ்சம் உஷாராகவே இருப்போம்" என்று நினைக்கிற வேலையிலே பெரியவர் கதையைத் தொடர்ந்தார்
"அலிடாவுக்கு அன்று ஒருநாள் லியோன் ஜேன்சன் என்கிறவர் மீது வயோதிகக் காதல் பூக்கிறது. லியோவும் அவர் மீது காதல் கொள்ள தன் புகைப் பழக்கத்தை விட்டொழித்தால்தான் நாம் திருமணம் செய்து இணைபிரியாமல் ஒருவருக்கு ஒருவர் அன்பில் வாழலாம் என்றார். அலிடாவும் மறுநாள் முதலே புகை பழக்கத்தை விட்டுவிட்டு புது மனிதை ஆனாராம்அதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது அலிடா கூறியதாவதுநான் மேற்கொண்ட இடைவிடா முயற்சி செய்ய முடியாததை என்னை ஆட்கொண்ட இணைபிரியா அன்பு செய்ததுஎன்று பதில் அளித்தாராம்."
சரி அதெல்லாம் இருக்கட்டும் நாட்டுக்கு என்ன நல்லது சொல்ல வருகிறேன் என்று கேட்கிறீர்களா?

சொல்றேன் கேளுங்க சங்கதிய
எல்லாமே அன்பு தாங்கஎன்று நான் கூறினால் 'போயா கிறுக்கன்னுசொல்கிற ஆட்கள் பலர் உள்ளனர். ஆனால் அன்பாகவே வாழ்ந்தவர் தான் இயேசு கிறிஸ்து. பாஸ்கா காலத்தினுடைய ஐந்து ஆறு வாரங்களில் பயணிக்கும் நமக்கு அன்பு பற்றி இயேசுவின் பகிர்வு நற்செய்திகளாக கொடுக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்த பிறகு சீடர்களுக்கு மறு அழைப்பு விடுக்கிறார் இயேசு. இம்முறை பேய்களை ஓட்டலாம், வல்ல செயல்கள் புரியலாம், இறையாட்சி மண்ணில் வரும் என்றெல்லாம் சொல்லாமல் அன்பை மட்டுமே மையமாக வைத்து ஆன்ம பிரமாணிக்கத்தை ஏற்படுத்துகிறார்

இங்கு அவர் அன்பு கொண்டவராக பேசவில்லை மாறாக அன்பாகவே பேசுகிறார். அவர் அன்பின் மறு உருவம் (1 யோவான் 4:8) என்பது நாம் அறிந்ததேஎனவே சீடர்களிடத்தில் பேசும் அவ்வார்த்தைகள் (யோவான் 15) இயேசு என்பவரின் தனி மனித அன்பு மட்டுமல்ல மாறாக முழு மனிதகுல அன்பிற்கு இட்டுச்செல்கிறது.

அது எப்படி என்றோ வாழ்ந்தவர் இன்று உள்ள என் மனித உணர்வுகளை உணர முடியும்? அதுவும் இந்த நவீன கால பிரச்சனைகளுக்கு எவ்வறு தீர்வாக இருக்க முடியும்? என்று வினவும் சங்கி மங்கிகளுக்கும் தான் திருஅவை அன்றே இயேசு 100% மனிதனும் 100% கடவுளுமாக இருக்கிறார் என்ற இறைக் கோட்பாட்டை பிரகடனப்படுத்தி இன்றைய நவீன புரிதலுக்கு விட்டுச்செல்கிறது.
அன்பர்களே இன்றைய கால அன்பு இச்சைக்கானதாகவும் பிச்சையெடுத்து பெருபனவாகவும் உள்ளது. அன்பு  அது புரிதலில் அமைய வேண்டும். கடவுளை நம்புவீர்களோ இல்லை நம்பாமல் இருப்பீர்களோ மார்ஸ் கிரகத்தில் மசாலா கேஃபே போடும் அளவுக்கு யோசிக்கும் மூலையை கொண்டுள்ள மனிதர்களை மரணத்தின் வாயில் வரை இமைப்பொழுதில் கொண்டு சேர்க்கும் ஆற்றல் அன்பிற்கு உண்டு என்றால் அது பொய்யே அல்ல (யோவான் 3: 16).
நாட்டை ஆளுவோர் நாட்டின் மீது அன்பு வைத்தால் நாசமாய் போகிற நிலைமை வரக் கூடுமோ? (லூக்கா13: 34)
அடுத்தவர் மீது அன்பு செலுத்தினால் நமக்கெதுவும் குறையுமோ? (மத்தேயு 22: 39)
பகைவர் மீதும் அன்பு செலுத்தினால் பாசக் கயிறும் தாக்குமோ? (லூக்கா 6: 27- 28)

அன்பைப் பற்றிப் பேசினால் பக்கங்கள் பத்தாது ஆனால் இன்று அதுவும் குறைந்துவிட்டது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உலகப்புகழ்பெற்ற கலைக்களஞ்சியத்தில் அணுவைப் பற்றி நான்கு வரிகளும் அன்பைப் பற்றி ஐந்து பக்கங்களும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதுவே இன்று எதிர்மறையாக அணுவைப் பற்றி ஐந்து பக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அன்பு என்ற வார்த்தையே அதில் இல்லை. எனவே அன்பு ஒருவரின் ஆளுமைக்கும் அழிவுக்கும் வித்திடும். அதை சரியாக கையாளாத போது ஒருவரின் உணர்வுகளையும் உடைத்துப் போடும் அளவுக்கு சக்தி மிகுந்தது. இந்த அன்பு என்பது எல்லா மதத்திலும் மதசார்பற்ற கொள்கைகளிலும் பொதுவான கருத்தியலாக அமைகின்றது.
அனைத்திலும் அன்பே சிறந்தது என்று புனித பவுலடியார் கூறுவது இதில் புலப்படுகிறது 1 கொரிந்தியர் 13 13.
உலக வரலாற்றிலேயே இயேசு ஒருவரைத் தவிர அன்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் யாரும் பிறக்கவில்லை பிறக்கவும் போவதில்லை ஏனெனில் அன்பே கடவுள் அல்லது கடவுள் அன்பாய் இருக்கிறார். நீங்களும் நானும் தாய் தந்தையின் அன்பினால் உருவானவர்கள். அன்பு மனிதராக பிறப்பெடுத்தவர்களின் பொதுச் சொத்து
அன்பு: இது உங்கள் சொத்து

சனிக்கிழமை சங்கதி - 1 செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்

சனிக்கிழமை சங்கதி - 1  

செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்

சகோ. மெரா 

இந்த இனிமையான சனிக்கிழமையிலே ஊரடங்கால் ஓஞ்சு போயிருக்கும் உங்களிடம் சின்ன சங்கதி பேசுவதில் மிக்க மகிழ்ச்சி. சனிக்கிழமை வந்தாலே பலருக்கு, அதுவும் கொரோனாவால் கோமாளிகளாக மாற்றப்பட்டு முடங்கிப் போயிருக்கும் பலருக்கு, எந்த சேனலில் எந்தப் படம் போடுவார்கள்? எவ்வாறு இன்றைய பொழுதை செலவழிக்கலாம்? என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு புறமிருக்க... அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்யலாம் என்று வயிறு காய்ந்து வறுமைக்கு வாசக்கால் வைத்து வாழ்வோர் இன்னொரு புறமிருக்க இவர்கள் இருவரையும் பயன்படுத்தி மேல் மாடியில் வசிப்போர்கள் மேளதாளத்தோடு சுரண்டிக்கொண்டிருக்க, கோயில்களும் கோயம்பேடு மார்கெட்டும் கஜானாவை காலியாக்கிய நிலையில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இதோ சொல்றேன் சங்கதி

இன்றைக்கான சனிக்கிழமை சங்கதியில் பக்கத்து ஊர் பெரியவர் துடுப்பு படகு ஓட்டி பயணிகளை இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஏற்றிச் செல்கிறார். அது துடுப்புப் படகு என்பதால் இருபக்கமும் துடுப்பு போட வேண்டும். அந்தப் பெரிய மனிதர் வைத்திருந்த ஒரு துடுப்பில் "நம்பிக்கை" என்றும் மற்றொரு துடுப்பில் "நற்செயல்" என்றும் எழுதியிருந்தார். அப் படகில் ஏறிய ஒரு சிறு வண்டு பெரியவரை பார்த்து "எதற்காக அவ்வாறு எழுதி உள்ளீர்?" என்று கேட்டானாம். உடனே பெரியவர் "அதற்கு அர்த்தம் என்ன என்று செயலில் காட்டுகிறேன் அப்போது புரிந்து கொள்வாய்" என்று கூறி ஒரு துடிப்பை மட்டும் கடலில் பயன்படுத்தி படகை ஓட்டினார். உடனே படகு ஒரு பக்கமாக சுழல ஆரம்பித்தது. அமர்ந்திருந்த சிறுவனுக்கு அடிவயிறு ஆட்டங்கண்டது. அதேபோல அடுத்த துடிப்பையும் தனித்து போட்டாராம். இப்போது படகு எதிர்திசையில் சுழலத் தொடங்கியது. பயத்தில்  கண் பிதுங்கிய சிறுவன் "போதும் தாத்தா என்னை கொல்லப் பார்க்கிறீரே!" என்று அச்சத்தில் அரண்டு போனான். அப்போது பெரியவர் இரு துடுப்பையும் பயன்படுத்த படகு முன்னேறியது. ஆட்டங்கண்ட சிறுவன் அமைதி அடைந்தான். அப்போது அந்தப் பெரியவர் சொன்ன சேதி என்ன தெரியுமா?

அதுதாங்க சங்கதியே
கடவுளை காணாமலே விசுவாசிக்கிற மக்களே ! நல்லா கேளுங்க! இந்தக் கொரோனா  தொற்று பீதியை கிளப்பிவிட்டிருக்கும் இத்தருணத்தில் பெரியவர் படகின் துடுப்பு இன்று நம் வாழ்விற்கும் ஒரு துப்பு கொடுக்கிறது. கோயிலுக்கு போய் திருப்பலி காண முடியாத நிலையில் இன்று ஒவ்வொருவர் வீட்டுத் தொலைக்காட்சியும் திருப்பலி மேடையாகிப் போயிருக்கிறது. இதன் மத்தியில் விசுவாசம் மேலோங்கி இருக்கிறதா? தளர்ந்து போய் இருக்கிறதா? என்றால் அதில் மெத்தனப் போக்கே கணிசமாக வளர்ந்திருக்கிறது. அன்றைக்கு இயேசு தான் செய்த அரும் அடையாளங்கள் வழியாக நம்பிக்கையையும் நற்செயலையும் பிணைத்து பாடமாக தந்துள்ளார். இந்த செயல் வடிவ விசுவாசம் மூன்று நிலைகளில் விளங்குகிறது.
  1. அன்று இரத்தப் போக்குடைய பெண்ணின் நோயை குணப்படுத்தியதும் (மத் 9:22 | மாற் 5:34), கானானியப் பெண்ணின் பேய் பிடித்த மகளை அவரின் ஆழ்ந்த விசுவாசத்தைக் கண்டு நலம் ஆக்கியதும் (மத் 15:28) நலமாக்கும் நம்பிக்கையை விளக்குகிறது
  1. இரண்டாவதாக மகதலா மரியாவுக்கும் (லூக் 8), தன் கால்களை கண்ணீரால் கழுவிய பெண்ணுக்கும் (லூக் 7:50), நன்றி சொல்ல திரும்பிவந்த தொழுநோய் நீங்க பெற்றவருக்கும் (லூக் 17:19) இயேசு கிறிஸ்து விடுதலை அளிக்கும் விசுவாசத்தை விளக்கியிருக்கிறார்.
  1. மூன்றாவதாக ஆழ்ந்த விசுவாசம் ஒரு வாழும் நற்செய்தியாளர் ஆக மாற்றுகிறது என்பதை பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்விலும் (மாற் 10:52), பெத்சதா குளத்தருகே 38 ஆண்டுகளா ய் உடல் நலமாக இருந்தவரை நலமாக நிகழ்விலும் (யோவா 5:1-15) அனைத்து திருத்தூதரின் அழைத்தலிலும் நற்செய்திப் பணியின் நம்பிக்கை என்ற கருத்தையும் இயேசுவை புலப்படுத்துகிறார்.
அன்னை மரியாளின் வாழ்க்கையிலும் இந்த மூன்று நம்பிக்கையின் செயல்பாடுகள் புலப்படுவது கண்கூடு. மரியன்னையின் வணக்க மாதத்தோடு பாஸ்கா காலத்தின் நான்கு ஐந்து வாரங்களில் ஆன்மிகப் பயணம் செய்து கொண்டிருக்கும் நமக்கு, அதுவும் கொரோனா தொற்றோடு ஊரடங்கு விதிகளின் காரணத்தினால் உள்ளடங்கில் வாழும் நமக்கு இன்று கூறப்படும் செய்தி நற்செயல் இல்லாத நம்பிக்கை நட்ட சவத்திற்கு நடுகல் நாட்டியது போன்றதாகும். 
சரிங்க அப்போது விசுவாசம் இல்லாமல் நற்செயல் செய்பவர்களை என்னவென்று சொல்வீர்கள் என்று எடக்கு மடக்காக கேள்வி கேட்கும் சங்கிகளும் புரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு செய்பவர்களும் தன்னை மீறிய சக்தி உண்டு என்ற நம்பிக்கை இல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய இயலாது. அதுவே ஆன்மீகமாக மாறுகிறது . "அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை" (மாற் 11:22) என்று இயேசு விவிலியத்தில் கூறுவதை கண்கூடாக பார்க்கிறோம்

இவ்வளவுதாங்க சங்கதி! இந்த கொரோனா ஊரடங்கு விதிகளுக்கு மத்தியிலும் நம்மால் இயன்ற அளவுக்கு வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்தும் உணவில்லாமல் தவிப்போருக்கு உணவு கொடுத்தும் செத்த உணர்வுகளுக்கு உயிர் ஊட்டுவோம். நம்பிக்கை கொள்ளுங்கள். நம்பிக்கை அதானே எல்லாம். நம்முடைய நம்பிக்கையை உரமாக்குவோம் நற்செயல்களை மரமாக்குவோம். செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்... 

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD